28

நான் சொல்லும் இதை தியானம் செய்து பாருங்கள். சோசுவை, ஒரு துறவி  “ஒரு நாய்க்கு புத்தத்தன்மை இருக்கிறதா இல்லையா?” என்று கேட்டார். சோசு, “இருக்கிறது”. என பதில் கூறினார்.

இதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு நாய்க்கு புத்த தன்மை இருக்குமானால் அது
உனக்கும் இருக்கும். நாயும் ஒருநாள் புத்தராக கூடும் என்றால் உனது லட்சியம் வெகு
தொலைவில் இல்லை. இதில் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நாய் புத்த தன்மை உடையது என்றால்
பின் அது உனக்கும், உனது எதிரிக்கும்கூட இருக்கும். எல்லா உயிர்களுக்கும்,
உடையதுதானே – இதில் உயர்வு தாழ்வு ஏது?

விழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதில்தான் முக்கியத்துவம்
இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாமா வேண்டாமா என்று நீ
முடிவெடுப்பதில்தான் இருக்கிறது – புரண்டு படுத்து போர்வையை இழுத்து போர்த்தி
தூங்குவதில்தான் சுகம். ஆனால் போர்வைக்குள் தூங்கும்போது, அதிகாலையை அனுபவித்தால்
நீ புத்தர்தான். அது உன்னைப் பொறுத்தது. புத்தர் மரத்தடியில் உட்கார
தீர்மானித்தார், நீ படுக்கையில் படுத்திருக்க தீர்மானித்திருக்கலாம். அது மிக முக்கியமான
வித்தியாசம் அல்ல. ஒரு புத்தர் மரத்தடியில் ஞானத்தன்மை பெற முடியுமானால் உன்னாலும்
போர்வைக்குள் ஞானத்தன்மை பெற முடியும். அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்.
ஏனெனில் நீ எதிர்கால மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய சாத்தியத்கூறை
உண்டாக்குகிறாய். இல்லாவிடில் மக்கள் மரத்தடியில்தான் உட்கார வேண்டும் என
எப்போதும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில்,
குளிர்காலத்தில், ஏதாவது சூழ்நிலையில் பிரச்னை இருக்கும்போதெல்லாம் அவர்கள்
புத்ததன்மையை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

அதில் எந்த பிரச்னையும் இல்லை என நான் உனக்கு கூறுகிறேன். போர்வைக்குள்
கதகதப்பாக இருந்தபடியே நீ புத்தராகலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில்
புத்தராவதற்க்கும் மரத்தடியில் உட்காருவதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அப்படித்தான் என்று கிடையாது. அதேபோல பத்மாசனத்தில் உட்காருவதற்கும்
ஞானத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பத்மாசனத்தில் அமர்வது தேவை என்றால்
நாய்களால் ஞானத்தன்மை பெற முடியாது. எப்படி ஒரு நாயால் பத்மாசனத்தில் உட்கார
முடியும்?.

போர்வைக்குள் இருக்கும் போது நடைபெறக்கூடும் என்றால் உங்களில் அதிகம் பேர்
அதைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என நினைக்கிறேன். புத்தர் மரத்தடியில்
அமர்ந்திருக்கும்போது அது நிகழ்ந்தது தற்செயலானது. அது போர்வைக்குள் இருக்கும்
போதும் நிகழக்கூடும் என்பது அவருக்குத் தெரியாது. உண்மையில் இதே கேள்வி அவரது
மனைவி அவரைப் பார்த்து கேட்டாள்……..

பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார். தந்தை மிக மிக
கோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். தந்தைக்கு மிகவும்
வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன், தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இவரை
சார்ந்துதான் இருந்தது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்க
விரும்பினார். தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காக
காத்திருந்தார். அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.

இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். கௌதம புத்தர்
கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை,
தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை
காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக்
கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்
போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர்
திரும்ப வராமலும் போகலாம்.

அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று
அவருக்கே தெரியாது. அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும்
ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார். அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகு
சிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடி
செல்கிறார்.

உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறை
முடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள்,
அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள்,
“மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவது ஆபத்தானது. மரணம்
வருவதற்கு முன் இறப்பை கடந்தும் இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.

அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனது
குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் –  அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்த
இரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி
இருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக் கேட்பாள்.

தேர் வாசலில் தயாராக இருக்கிறது, எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான்
பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று  கூறியிருந்தார்.

ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்து
அழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?,
நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன?
என்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார். ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்
ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை
வந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை,
தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி
வந்ததுதான். அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும்
ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். பின்
திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போல
நிற்கிறான் என்பதை உணர்ந்தார்.

தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை  துடைத்துக்
கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான்.
உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல
இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.

“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன்,
நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால்
அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்
என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.”
என்றார்.

அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.

நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,

அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,

நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை
வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான்
உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.
நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான்
இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி.
நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது……..

இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாக
ஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது.
உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள்
மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகு
புறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்தது என்னவோ அது
இங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.

இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி
வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது
என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல
வேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அது
நிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்ற
இடங்களைப் போன்றதே. ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப்
பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.

நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான்
என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு. நீ
எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?,
என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்
முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?,
நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.

என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான்
உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான் என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாக
துறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள்
ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும்
கடினம்’. என்றது.” என்று கூறினார்.

யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான். அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள் கூறிய பதிலின் உண்மை தன்மையில்
என் உள்ளம் குளிர்ந்தது. இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்
போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.

உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத் தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள்?”
என்று கேட்டாள்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை –
அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்த
பெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.

ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான்
என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த
பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம்
கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை
கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.

அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்து
இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?,
நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…… எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.

புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். ஏனெனில் அழியாத,
யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான்
அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணர
முடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான்
உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.

இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு
எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதை
தான் சந்திரகிரகணம் என்று கூறப் படுகிறது. கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான் என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.

அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியே தள்ளியுள்ள
காட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்த
கேள்வி. ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்று
கேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை. எங்கே
இதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும்
இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன். ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.

License

Share This Book