30

உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும்
கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான்
செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து
வந்திருக்கிறோம்.

அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும்
மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர்
ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு
என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.
நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள்
அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு
செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே,
உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன்.

அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து
விட்டார். அவர் “என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்”. என்று கூறி விட்டார்.

நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், “அவர் தோட்டத்துக்கு  வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள்
நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து
ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்.” என்று கூறினேன்.

மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன
கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து
பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன்.

அவர் தோட்டக்காரரிடம், “ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு
எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட
வேண்டிய அவசியம் இல்லை.” எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த
பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ
போவதாக முடிவெடுத்தார்.

அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும்
சொல்லி வைத்தேன்…. அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான்
அவரிடம், “நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு
விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு
பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து
ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை
குறித்துக் கொள்ளுங்கள்.” என்றேன்.

நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன்.

பேராசிரியர், “ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப்
போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை.
ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு
அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது.” என்றார்.

அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு
கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர்
வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, “என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா
என்று தெரியவில்லை”. என்றார்.

பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும்
பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த
பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது.

பேராசிரியர், “எனக்கு மூச்சு வாங்குகிறது… உடம்பு
நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு
சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது”. எனக் கூறி லிப்ட் கேட்டார்.

அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி
வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி,
என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், “நீங்கள் வந்திருக்கக்
கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப்
போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல
இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக
பாதித்திருக்கும் போலிருக்கிறதே.” என்று கூறினார்.

அதற்கு அவர், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட்
அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது
என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து
விட்டது போல காட்டுகிறது”. என்றார்.

அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு
வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை
தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன்.

அவன், “ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன
கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே
இல்லையே.” என்றான்.

அதற்கு நான், “நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான
நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே.
நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்.” என்றேன்.

அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு
நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், “நீ இங்கில்லையென்றால் நான் கீழே
விழுந்திருப்பேன்!” என்று கூறினார்.

பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக்
கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், “கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள்,
உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான
நாற்காலியில் உட்கார வைத்தேன்.

அவர், “ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும்.
என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் –
என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு
யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு
யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்” என்றார்.

நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள்
குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக்
காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம்
சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்.” என்றேன்.

அவர், “சில குறிப்புகளா என்ன?” என்றார்.

“நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்” என்றேன்.

அவர், “யாரிடமிருந்து?” என்று கேட்டார்.

நான், “உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட்
மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த
பியூன்.” என்றேன்.

அவர், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார்.

நான், “இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத
ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?” என்றேன்.

நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று
வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், “எப்படி நீங்கள்
சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள்
மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது
இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில்
உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம்,
ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான்
இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள்.
பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக்
வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக
உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை
நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை
தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும்
நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து.
அவ்வளவுதான்.” என்று கூறினேன்.

என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து
நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர்
ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து
போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள்
எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு
ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள்
முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல
சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த
குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி
விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, “அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான
மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்,” என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு
பேராசிரியரிடம், “இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை
செய்தாய்” என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், “நீங்கள் எனது
பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா”  என்று கேட்டார்,

அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான்.
அவர், “அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர்
எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி
விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு
வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை
கெடுத்துவிட்டாய்” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அவரது மனைவி, “நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத
ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு
நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல்
திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா?  ஒரு
கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான்.
உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான்.

License

Share This Book